பிலிப்பீன்ஸ் கர்தினால் : புதியவழி நற்செய்திப் பணியில் செயல்திறத்துடன் ஈடுபட பொதுநிலையினர்க்கு
அழைப்பு
ஆக.06,2013. பொதுநிலை விசுவாசிகள் தாங்கள் வாழும் இல்லத்திலும், பணியிடங்களிலும் சமூகத்திலும்
நற்செய்திக்கு முதல் சாட்சிகளாக வாழுமாறு கேட்டுக்கொண்டார் மனிலா பேராயர் கர்தினால் Luis
Antonio Tagle. மனிலாவில் முதல் சனிக்கிழமை மறைக்கல்வி வகுப்பில் இவ்வாறு உரைத்த
கர்தினால் Tagle, கத்தோலிக்கர் தாங்கள் அறிவிக்கும் விசுவாசத்துக்கு வாழுமிடங்களில் சாட்சிகளாக
இருந்து, புதியவழி நற்செய்திப் பணியில் செயல்திறத்துடன் ஈடுபடுமாறு அழைப்புவிடுத்தார். நற்செய்தியை
அறிவிப்பதற்குப் பொதுநிலையினர் அருள்பொழிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், கத்தோலிக்கத்
திருஅவையின் அறநெறி மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகளை அறிவிப்பதில் பொதுநிலையினரின் தகுதியே
அவர்களுக்கு முக்கிய பங்கை அளிக்கின்றது என்றும் கர்தினால் Tagle கூறினார். அரசியல்வாதிகளும்
தங்களது அரசியல் உலகில் கிறிஸ்துவின் போதனைகளைச் செயல்படுத்துமாறும், அதன்மூலம் நாட்டின்
அரசியல் அமைப்பு, ஊழலும் சந்தர்ப்பவாதமும் நிறைந்தது என்ற கறை படியாமல் இருக்கும் என்றும்
கூறினார் மனிலா கர்தினால் Tagle. அரசியல் உலகை, அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவராலும்
சுத்தம் செய்ய முடியாதும் என்றும் உரைத்த பிலிப்பீன்ஸ் கர்தினால், அரசியல்வாதிகள் தாங்கள்
கிறிஸ்தவர்கள் என்பதில் உள்ளார்ந்த அக்கறையுடன் இருந்தால் கிறிஸ்துவின் இறையாட்சியையும்,
நற்செய்தியையும் அரசியலில் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.