கர்தினால் டர்க்சன் : உண்மையான அமைதியை நிலைநாட்டும் பணியில் அனைவரும் ஒன்றிணைக்கப்பட
வேண்டும்
ஆக.06,2013. உண்மையான அமைதியை நிலைநாட்டும் பணியில் யாரும் ஒதுக்கப்படாமல் அனைவரும் ஒன்றிணைக்கப்பட
வேண்டும் என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்
கூறினார். ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் கடுமையாய்த் தாக்கப்பட்டதன்
68ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டுவரும் கர்தினால் டர்க்சன், ஹிரோஷிமாவில்
இத்திங்கள் மாலை பல்சமயத் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறினார். ஜப்பானின்
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் தாக்கப்பட்டதன் ஆண்டு நிறைவையொட்டி ஜப்பான்
ஆயர்கள் ஒவ்வோர் ஆண்டும், “அமைதிக்கான பத்து நாள்கள்” என்ற ஒரு நிகழ்வைக் கடைப்பிடித்து
வருகின்றனர். இவ்வாண்டின் இந்நிகழ்வில் கலந்து கொண்டுவரும் கர்தினால் டர்க்சன்,
ஹிரோஷிமா நினைவு நாளில் உண்மையான அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகத்
தெரிவித்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியிலும்
உலகில் முதன்முறையாக அணுகுண்டுகள் வீசப்பட்டன.