மத்திய பிரதேச மதமாற்றத் தடைச்சட்டம் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்
ஆக.,05,2013. இந்தியாவின் மதச்சார்பற்ற மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆபத்தைக் கொணரும்
மதமாற்றத் தடைச்சட்டத்தை அங்கீகரிப்பதிலிருந்து விலகவேண்டும் என மத்திய பிரதேச ஆளுனரை
விண்ணப்பித்துள்ளது இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவை. இந்தியாவின் 67வது சுதந்திர
தினம் நெருங்கிவரும் இவ்வேளையில் மத்திய பிரதேச மதச்சுதந்திரச் சட்டத்தில் திருத்தத்தைக்
கொணர முயலும் மாநில அரசின் முயற்சியை நிராகரிப்பது ஆளுனர் ஸ்ரீ ராம் நரேஷ் யாதவ், மக்களாட்சிக்கு
ஆற்றும் சேவையாக இருக்கும் என்றார் கிறிஸ்தவ அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ். மதம் மாற
விரும்புபவர்கள் குறித்து அந்த மதமாற்ற நிகழ்ச்சி இடம்பெறுவதற்கும் 30 நாட்களுக்கு முன்னரே
அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் மதக் குருக்களுக்கு 50
ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்றாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் வழங்கும் சட்டத்திருத்தம்
மத்திய பிரதேச பா.ஜ.க. அரசால் விவாதிக்கப்பட்டு வருகிறது.