ஹிரோஷிமா, நாகசாகி நினைவு தினத்தில் கர்தினால் டர்க்சன்
ஆக.,03,2013. இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் தாக்குதல்களுக்குப்
பலியானவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கென அந்நாட்டுக்கான ஐந்து நாள்
சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர். ஜப்பானின் ஹிரோஷிமா
மற்றும் நாகசாகி நகரங்களில் இடம்பெறும் நினைவுநாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உலகின்
அமைதிக்கு அழைப்பு விடுப்பதற்காக அந்நாட்டுக்கானச் சுற்றுப்பயணத்தை வருகிற திங்களன்று
தொடங்குகிறார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன். இம்மாதம்
5ம் தேதி முதல் 9ம் தேதிவரை இடம்பெறும் இச்சுற்றுப்பயணத்தில், ஹிரோஷிமா புனித மரியா பேராலயத்தில்
உலகின் அமைதிக்காகத் திருப்பலி நிகழ்த்துதல், ஹிரோஷிமாவில் பல்சமயக் கூட்டத்தில் கலந்து
கொள்தல், நாகசாகியில் உலகின் அமைதிக்கான பல்சமய உரையாடல் அரங்கத்தில் உரை நிகழ்த்துதல்,
இந்நகரில் அணுகுண்டு வீச்சுக்குப் பலியானவர்களுக்கு நினைவுத் திருப்பலி நிகழ்த்துதல்
போன்ற நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்
பால் அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்நினைவு நாளையொட்டி ஜப்பான் ஆயர்கள் ஒவ்வோர்
ஆண்டும் பத்து நாள்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்கப் போர் விமானம்,
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதியன்று நாகசாகியிலும்
அணுகுண்டுகளை வீசியது. இதில் ஹிரோஷிமாவில் 90,000 பேர் முதல் 1,66,000 பேர் வரையும்,
நாகசாகியில் 60,000 பேர் முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.