2013-08-01 16:27:44

அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கு அயர்லாந்து நாடு அர்ப்பணிக்கப்படும் - அயர்லாந்து ஆயர்கள் பேரவை


ஆக.01,2013. இம்மாதம் 15ம் தேதி, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கு அயர்லாந்து நாடு அர்ப்பணிக்கப்படும் என்று அயர்லாந்து ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அயர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் Knock நகர் நமது அன்னை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நவநாள் பக்தி முயற்சிகளின் சிகரமாக ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி Knock அன்னை மரியா திருவிழா கொண்டாடப்படும்.
இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள இத்திருவிழாவின் நவநாள் பக்திமுயற்சிகளின்போது, Armagh பேராயரும், அயர்லாந்து திருஅவையின் தலைவருமான கர்தினால் Seán Brady அவர்கள் அயர்லாந்து நாட்டை அன்னைக்கு அர்ப்பணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கர்தினால் Brady அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வழங்கிய விசுவாச ஒளி சுற்றுமடலில் அன்னை மரியாவை நமது விசுவாசத்தின் அன்னையாகவும், எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அனைத்து ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் Knock அன்னையின் திருத்தலத்தில் கூடி, இந்த அர்ப்பணிப்பில் கலந்து கொள்ளுமாறு கர்தினால் Brady அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.