அனைத்துலக நட்பு தினம் : நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் தினம்
ஜூலை,31,2013. உலகளாவிய சமுதாயம், நட்பின் ஆற்றலைப் பயன்படுத்தி, பொதுவான உறவை வலுப்படுத்தவும்,
அமைதி மற்றும் உறுதியான வளர்ச்சிக்கான முயற்சிகளைத் தூண்டவும் வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்
ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். ஜூலை 30, இச்செவ்வாயன்று அனைத்துலக நட்பு தினம்
கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், இன்றைய உலகில் பல பதட்டநிலைகளுக்கும்
கலவரங்களுக்கும் காரணமாக இருக்கும் புரிந்துகொள்ளாமை மற்றும் நம்பிக்கையின்மையை எதிர்த்துச்
செயல்படுவதற்கு இந்த நட்பு தினம் முக்கியமான வாய்ப்பாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நிலையான
அமைதியை ஊக்குவித்து, உறுதியான முன்னேற்றத்தை வளர்ப்பதற்கு மனித ஒருமைப்பாட்டுணர்வு அவசியம்
என்பதை இந்த நட்பு தினம் நினைவுபடுத்துகின்றது என்றும் கூறியுள்ள பான் கி மூன், போர்கள்
மனிதர்களின் மனங்களில் தொடங்குவதால் அமைதியைப் பாதுகாப்பதும் மனிதர்களின் மனங்களில் உருவாக
வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அனைத்துலக நட்பு தினம், 2011ம் ஆண்டு மே மாதத்தில்
ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது.