2013-07-26 15:39:13

Copacabana கடற்கரையில் திருத்தந்தை - உங்கள் முகங்களில் கிறிஸ்துவின் இளைய முகத்தைக் கண்டு நான் மகிழ்கிறேன்


ஜூலை,26,2013. ஜூலை 25 செவ்வாய் மாலை 6 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Copacabana கடற்கரையில் கூடியிருந்த இளையோரைச் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரை:
உங்கள் முகங்களில் கிறிஸ்துவின் இளைய முகத்தைக் கண்டு நான் மகிழ்கிறேன். உலக இளையோர் நாள் 1987ம் ஆண்டு, நான் பிறந்த நகரான Buenos Airesல் நடந்தபோது, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறிய வார்த்தைகளை இன்னும் என் உள்ளத்தில் போற்றி வளர்த்து வருகிறேன். "உங்களிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது! இயேசு கிறிஸ்துவிலும், மீட்பளிக்கும் அவரது சிலுவையிலும் நீங்கள் உறுதியாய் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று திருத்தந்தை அன்று கூறினார்.
நமது நிகழ்வுகளைத் தொடர்வதற்கு முன், இவ்வுலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள புறப்பட்ட இளையோர் French Guyanaவில் விபத்துக்குள்ளாகி, அதில் Sophie Morinière என்ற இளம்பெண் இறந்ததையும், ஏனைய இளையோர் காயமுற்றதையும் நினைவில் கொண்டு, அவர்களுக்காக ஒரு நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்துவோம்.
இலத்தீன் அமெரிக்காவிற்கு உலக இளையோர் நாள் இரண்டாவது முறையாக வந்துள்ளது. வெகு தூரங்களில் உள்ள நாடுகளிலிருந்து இங்கு கூடியிருக்கிறீர்கள். இந்த வாரம் முழுமையும் திருஅவையின் மையமாக Rio நகரம் விளங்குகிறது. Corcovado குன்றிலிருந்து நம் அனைவரையும் காணும் உலக மீட்பர் கிறிஸ்து, அனைவரையும் அணைத்து, ஆசீர் வழங்குகிறார்.
அன்று திபேரிய ஏரிக்கருகே தன் சீடர்களைச் சந்தித்த இயேசு, அவர்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறும்படி அழைத்தார். அதே இயேசு இன்று நம்மை அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்க தயாராக இருக்கிறீர்களா? உங்கள் குடும்பமும், நீங்கள் வாழும் சமுதாயமும் உங்களிடம் வழங்கியுள்ள நம்பிக்கை எனும் கொடையை உறுதிப் படுத்தவே நான் இங்கு வந்தள்ளேன்.
ஐந்து கண்டங்களின் பல நாடுகளிலிருந்து இங்கு கூடியுள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உலகில் உள்ள அனைத்து இளையோரையும், குறிப்பாக, இங்கு வர முடியாமல், வானொலி, தொலைகாட்சி வழியாக உங்களைத் தொடரும் அனைத்து இளையோரையும், உங்கள் வழியாக நான் வாழ்த்துகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.