ஜூலை,24,2013. இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலவும் பற்றாக்குறைகள் மற்றும் பிரச்சினைகளை
நேரடியாக சென்று ஆய்வுசெய்யும் பொருட்டு, அரசுத் தலைவர் மஹிந்த இராஜபக்ஷ அவர்களின் பரிந்துரையின்படி,
இரண்டு அமைச்சர்கள் இச்செவ்வாய் மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்களைச்
சந்திக்கச் சென்றிருந்தனர். மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ அருள் பணியாளர்களுக்கும்
அரசுத் தலைவருக்கும் இடையில் கடந்த வாரம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து,
இச்செவ்வாய் மாலை மன்னாருக்குச் சென்றிருந்த அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த மற்றும் சுசில்
பிரேமஜயந்த ஆகியோர் மாலை 6 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயர் இராயப்பு
ஜோசப்பு அவர்களைச் சந்தித்து பேசினர். மன்னாரில் தற்போதுள்ள நிலவிவரும் சட்டவிரோத
மீள்குடியேற்றம், பாகுபாடான தொழில்வாய்ப்பு வழங்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்
இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று தெரிகிறது.