திருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின நிகழ்வுகளில் செபத்தால் தன்னோடு இணைந்திருக்குமாறு
முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடம் வேண்டுகோள்
ஜூலை,20,2013. ஜூலை 22, வருகிற திங்களன்று தான் தொடங்கவிருக்கும் பிரேசில் நாட்டுக்கானத்
திருப்பயணத்துக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்னாள் திருத்தந்தை
பெனடிக்ட் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இவ்வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னாள்
திருத்தந்தை பெனடிக்ட் அவர்களை நேரில் சென்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், பிரேசில்
நாட்டுக்கானத் திருப்பயண விபரங்கள் அடங்கிய கையேட்டை கொடுத்ததோடு, அந்நாட்டின் ரியோ டி
ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்துக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்
எனத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். ஏறக்குறைய
அரைமணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் கொலோன், சிட்னி, மத்ரித் ஆகிய நகரங்களில் தான்
முன்னர் கலந்துகொண்ட உலக இளையோர் தின அனுபவங்கள் குறித்து திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள்
பகிர்ந்து கொண்டார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார். வத்திக்கானில் திருத்தந்தை
பெனடிக்ட் அவர்கள் வாழ்ந்துவரும் Mater Ecclesiae இல்லத்தின் சிற்றாலயத்தில் முதலில்
இவ்விரு திருத்தந்தையரும் செபித்த பின்னர், இவ்விருவரும் நட்புணர்வுடன் பேசிக் கொண்டிருந்தனர்
என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார். ரியோ டி ஜெனீரோவில் இம்மாதம் 23 முதல் 28
வரை நடைபெறவிருக்கும் 28வது உலக இளையோர் தினம் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டதாகும்.