ஜூலை,19,2013. வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையேயுள்ள எல்லையில் இராணுவமற்ற பகுதியில்
அமைதிக்கான பேரணி நடத்தி செபிக்கத் திட்டமிட்டுள்ளனர் கொரியக் கத்தோலிக்கர். கொரியத்
திருஅவை, இந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்புக்காகச் செபிக்கும்
சிறப்புக் காலமாகக் கடைப்பிடித்துவரும்வேளை, கொரியக் கத்தோலிக்கர் இவ்விரு கொரிய நாடுகளின்
எல்லையில் அமைதிக்காகச் செபிக்கத் திட்டமிட்டுள்ளனர். 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி
இரு கொரிய நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 60ம் ஆண்டின் நினைவாக பல்வேறு
திட்டங்களை உருவாக்கியுள்ளது கொரிய ஆயர் பேரவையின் ஒப்புரவு ஆணையம். இத்திட்டங்கள்
குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆயர் Peter Lee Ki-heon, இரு கொரிய நாடுகளுக்கிடையே
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றபோதிலும், கொரியத் தீபகற்பம் இன்னும் போர்ச்
சூழலிலே இருக்கின்றது, இறுதி அமைதி ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை என்று கூறியுள்ளார்.