மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நவீனத் தொடர்புத் துறை நுட்பங்கள்
பெருமளவில் உதவிகள் செய்யமுடியும், ஐ.நா.
ஜூலை,17,2013. மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்குக் கொணர்வதில் இன்றையத் தொடர்புத்துறை
நுட்பங்கள் பெருமளவில் உதவிகள் செய்யமுடியும் என்று ஐ.நா.வின் இணைப் பொதுச் செயலர் Jan
Eliasson அவர்கள் கூறினார். இன்றையத் தொடர்புத்துறை நுட்பங்களை மையப்படுத்தி, நியூ
யார்க் நகரில், ஜப்பான் நாடு ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இணைப்
பொதுச் செயலர் Eliasson அவர்கள் இவ்வாறு கூறினார். கடந்த வாரம் ஐ.நா. கொண்டாடிய மலாலா
நாளை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டிய திருவாளர் Eliasson அவர்கள், சிறுமி மலாலா
தாக்கப்பட்ட நிகழ்வு தொடர்புச் சாதனங்கள் வழியே விரைவில் உலகெங்கும் பரவியதால், அவரது
உயிர் காப்பற்றப்பட்டதோடு, அவர் மேற்கொண்ட போராட்டமும் உலகெங்கும் ஆதரவைப் பெற்றது என்று
கூறினார். அண்மையில் இளம் சிறுமி மலாலா அவர்கள், ஐ.நா. அவையில் ஆற்றிய உரையும் உலகெங்கும்
மக்களைச் சென்று சேர்ந்தது என்றும், அவர் உரையாற்றிய ஒரு சில நொடிகளில் 24,000க்கும்
அதிகமானோர் பதில் அளித்தனர் என்றும் இணைப் பொதுச் செயலர் Eliasson அவர்கள் சுட்டிக்காட்டினார். மனித
உரிமை மீறல்களை, குறிப்பாக, பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்முறைகளைத்
தடுத்து நிறுத்த தொடர்புச் சாதனங்கள் பெருமளவில் தங்கள் கடமைகளை ஆற்றவேண்டும் என்ற அழைப்பையும்
ஐ.நா.வின் இணைப் பொதுச் செயலர் Eliasson அவர்கள் விடுத்தார்.