2013-07-17 15:57:34

திருத்தந்தை பிரான்சிஸ் : துன்புறுவோர் மீது கருணை கொள்ள வேண்டும்


ஜூலை,17,2013. இறைவன் நம்மீது கருணை கொண்டுள்ளார். நாமும் பிறர்மீது, குறிப்பாக, துன்புறுவோர் மீது கருணை கொள்ளவேண்டும் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
மேலும், "நீ மகிழ்வுடன், இயேசுவின் நட்பில் ஒவ்வொரு நாளும் வளர்வதற்கு முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் பரிந்துரை உனக்கு நிறைவாய் கிடைக்கட்டும்" என்ற வார்த்தைகளுடன் மூன்று வயது குழந்தைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இறையடி சேர்ந்ததன் 50ம் ஆண்டு நினைவு, நடைபெறும் நம்பிக்கை ஆண்டில், ஜூன் மாதம் 3ம் தேதி வத்திக்கானில் கொண்டாடப்பட்டது. அப்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த Alice Maria Rocca என்ற 3 வயது குழந்தை, தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.
இந்த மடலுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதில் எழுதி, அதனை அக்குழந்தைக்கு அண்மையில் அனுப்பியிருந்தார். இந்த மடலைப் பெற்ற Roccaவின் குடும்பத்தினர், திருத்தந்தையிடமிருந்து தாங்கள் பெற்ற இந்த அற்புதக் கொடைக்காக Zenit கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில், நன்றி தெரிவித்துள்ளனர்.
Roccaவுக்கு எழுதியக் கடிதத்தில் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டத் திருத்தந்தை, குழந்தை Roccaவின் குடும்பத்தினருக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.