2013-07-17 15:59:54

28வது அகில உலக இளையோர் தின நாட்களின்போது, 250 ஆயர்கள் இளையோருக்கு மறைகல்வி அமர்வுகளை நடத்துவர்


ஜூலை,17,2013. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் 28வது அகில உலக இளையோர் நாட்களின்போது, ஜூலை 24 முதல் 26 முடிய 250 ஆயர்கள் இளையோருக்கு மறைகல்வி அமர்வுகளை நடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நம்பிக்கை நோக்கிய தாகம், இறைவனை நோக்கிய தாகம்", "கிறிஸ்துவின் சீடராய் இருப்பது", "மறைபரப்புப் பணியாளராகச் செல்க" என்ற மூன்று தலைப்புக்களில் இந்த மறைகல்வி அமர்வுகள் பல்வேறு மொழிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் Timothy Dolan உட்பட, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் 8 பேர், மற்றும் இந்தியா, கானா, பிலிப்பின்ஸ், பங்களாதேஷ், கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் ஆயர்கள் ஆங்கிலத்தில் மறைக்கல்வி அமர்வுகளை நடத்துவர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த அமர்வுகளில் இளையோர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்படும் என்றும், இந்த அமர்வுகளில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும் என்றும், இறுதியில் ஆயர்கள் நிறைவேற்றும் திருப்பலியுடன் இந்த அமர்வுகள் நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.