2013-07-16 15:22:25

இயேசு சபை அதிபர் இளையோரிடம் : கண்களும் இதயங்களும் திறந்தே இருக்கட்டும்


ஜூலை,16,2013. இவ்விளையோர் தினத்தில் கலந்து கொள்ளச் செல்லும் இளையோர் எப்பொழுதும் தங்களின் கண்களையும் இதயங்களையும் திறந்தே வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார் இயேசு சபை அதிபர் அருள்பணி அடோல்ஃபோ நிக்கோலாஸ்.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் இளையோர் தினத்தில் கலந்து கொள்வதற்காக, சான் சால்வதோரில் 10 நாள்கள் முன்தயாரிப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஏறக்குறைய இரண்டாயிரம் இளையோருக்கு இத்திங்களன்று திருப்பலி நிகழ்த்தியபோது இவ்வாறு கூறினார் அருள்பணி நிக்கோலாஸ். பல முதியவர்கள் சொல்வது போல இளையோரிடம் விசுவாசம் இல்லாமல் இல்லை, இளையோர் தங்களின் இதயங்களை நோக்கினால் அங்கே அதனைக் காண்பார்கள் என்றும், பிரேசில் மக்களையும் அங்கு வரும் மற்ற திருப்பயணிகளையும் பெரிய இதயத்துடனும், பரந்த கண்ணோட்டத்துடனும் பார்க்கும்போது வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்றும் அருள்பணி நிக்கோலாஸ் கூறினார்.
கிறிஸ்தவத்தில் இரகசியங்களின் இரகசியம் அன்பு என்றுரைத்த அருள்பணி நிக்கோலாஸ், இறையன்பு பிறரன்பாக மாறுகிறது என்றும் கூறினார்.
இந்த முன்தயாரிப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய இரண்டாயிரம் இளையோரில் பெரும்பாலானோர் பல நாடுகளின் இயேசு சபை பல்கலைக்கழகங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.