மெக்சிகோ ஆயர் : கொலைகளைக் கட்டுப்படுத்த அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது
ஜூலை,12,2013. மெக்சிகோவில் போதைப்பொருள் வியாபாரிகளோடு தொடர்புடைய காணாமற்போதலும், கொலைகளும்
தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மெதுவாகச்
செய்து வருகின்றது என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் குறை கூறியுள்ளார். மெக்சிகோவின் குவாதாலூப்பே
அன்னைமரியா திருத்தலத்துக்குத் திருப்பயணமாகச் சென்ற அந்நாட்டின் Saltillo ஆயர் Raul
Vera Lopez நிருபர் கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த வாரத்தில் 14 மாநிலங்களில்
இடம்பெற்ற தேர்தல்களுக்கு முன்னர் சில வேட்பாளர்கள் கொல்லப்பட்டது உட்பட அவ்விடங்களில்
இடம்பெற்ற வன்முறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Lopez, திட்டமிட்டக் குற்றங்களை
ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் தெளிவாக இல்லை என்று கூறினார். திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள்,
அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் வன்முறைச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், போதைப்பொருள்
வியாபாரிகள் விரும்பும் ஆட்களே அரசுப்பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் ஆயர் எச்சரித்தார்.