திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எம்மிடையே இருக்கும் அக்கறையின்மை குறித்து கண்ணீர்விட
அருள்தாரும்
ஜூலை,12,2013. ஆண்டவரே, இவ்வுலகிலும் எம்மிலும் இருக்கின்ற கொடுங்குணம் குறித்தும், அக்கறையின்மை
குறித்தும் கண்ணீர்விட எமக்கு அருள்தாரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று
Twitter செய்தியொன்றை அனுப்பியுள்ளார். ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலியம், அரேபியம்,
இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் ரியோ டி ஜெனீரோ இளையோர் மாநாட்டில்
இடம்பெறவிருக்கும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி, ஒருமைப்பாட்டின் செய்தியைக் கொண்டுள்ளது
என்று கூறப்பட்டுள்ளது. இக்கால இளையோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதாய்
சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும், இப்பக்திமுயற்சி ஒரு
மணி, 15 நிமிடங்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த 14 நிலைகளையும் 280 தன்னார்வத்
தொண்டர்கள் அமைத்து வருகின்றனர்.