ஜூலை 13, 2013. கற்றனைத்தூறும்...... வெறிநாய்களின் ஆபத்து
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வெறிநாய் கடியால் இறந்து வருவதாக உலக சுகாதார
அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்ட
சிறுவர், சிறுமியர். கோடைக்கால கடும் வெயிலில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு
வெறிபிடிக்கும். தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும்
‘பிராய்லர்’ கோழிக் கழிவுகளை உட்கொள்ளும் நாய்களுக்கு வெறிபிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கழிவுகள் எந்தப் பாதுகாப்பும் இன்றி பல இடங்களில் கொட்டப்படுகின்றன. பராமரிப்பின்றித்
திரியும் தெருநாய்கள் இந்த கழிவுகளைத் தின்பதால், வெறித்தன்மை ஏற்படுகிறது. கோழிகளைச்
சுத்தம் செய்யும்போது, அவற்றில் இருக்கும் நஞ்சுப் பகுதியை முதலில் அகற்றுவதைப் பார்த்திருக்கிறோம்.
இதில், ஆளைக் கொல்லும் கொடும் நச்சுத்தன்மை உள்ளது. கோழிக் கழிவுகளைத் தின்னும் நாய்கள்
இவற்றையும் சேர்த்துத் உட்கொள்ளும்போது, அந்த நாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புகள்
அதிகம். அதாவது, ரேபீஸ் (Rabies) என்ற இந்த வைரஸ் அதனுடைய உடலுக்குள் சென்று பலுகிப்
பெருகுகிறது. உமிழ்நீர் அதிகம் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த ரேபீஸ் நோயால் தாக்கப்பட்ட
ஒரு நாய் மனிதர்களைக் கடிக்கும்போதோ, காயம் உள்ள இடத்தில் அதன் உமிழ்நீர் படும்போதோ,
ரேபீஸ் என்ற கொடும் வியாதி மனிதரைத் தாக்குகிறது. நாய் கடித்த 30 முதல் 60 நாட்களுக்குள்
வியாதி மனிதரிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி,
நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன.
குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு
தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி, நாய் கடித்த இடத்தில்
வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு, பயம், தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப்
பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் ஏற்படுகிறது. உமிழ்நீர்கூட விழுங்க
முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால்
பயம், மாய கற்பனைத் தோற்றம், தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி
முடிவில் மரணம் நிகழ்கின்றது.