2013-07-12 15:12:57

சிரியாவில் இடம்பெறும் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரிட்டன் ஆயர்கள் செபம்


ஜூலை,12,2013. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் பேரவைத் தலைவர் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கத்தோலிக்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலண்டனின் Westminster பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பலி நிகழ்த்திய பேராயர் நிக்கோல்ஸ் சிரியாவின் உள்நாட்டுச் சண்டையில் துன்பங்களை அனுபவித்துவரும் அனைவருக்காகவும் செபித்தார்.
மேலும், இவ்வாரத் தொடக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆயர்கள், சிரியாவின் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு கிடைக்கும்படியாக அனைத்துக் கத்தோலிக்கரும் செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், சிரியாவில் சண்டை முடிவதற்குத் தங்களால் இயன்ற உதவிகளை, அப்பகுதியில் செயல்படும் பிறரன்பு நிறுவனங்கள் வழியாகச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர் பிரிட்டன் ஆயர்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக எகிப்தில் இடம்பெற்றுவரும் கலவரங்கள் தங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருப்பதாகவும் பிரிட்டன் ஆயர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.