திருத்தந்தை பிரான்சிஸ் : உலகில் நிறுவனம் போன்று நடத்தப்படும் குற்றங்களைத்
தடுக்கும் அரசுகளின் முயற்சிகளுடன் திருப்பீடமும் இணையும்
ஜூலை,11,2013. மனித சமுதாயத்தின் பொது நலனைக் குலைக்கும் வண்ணம், ஒரு பன்னாட்டு நிறுவனத்தைப்
போல, திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள் உலகில் பெருகி வருவதைத் தடுக்க அகில உலகச்
சமுதாயம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் திருப்பீடமும் இணைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். தனது சொந்த எண்ணங்களையும் முயற்சியையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில்
திருத்தந்தை வெளியிடும் கருத்துக்கள் ‘Motu Proprio’ என்று வழங்கப்படுகின்றன. உலக
அளவில் நிறுவனம் போன்று நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்க, பல அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுடன்
திருப்பீடம் தன்னையே இணைத்துக்கொள்ளும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று
விடுத்துள்ள ‘Motu Proprio’ அறிக்கையின் வழியே உறுதி அளித்துள்ளார். மனித மாண்பு,
பொதுநலன், அமைதி என்ற உயர்ந்த விழுமியங்களை என்றும் ஆதரிக்கும் கத்தோலிக்கத் திருஅவை,
நன்னெறி விழுமியங்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளுக்குத் தக்க நீதி வழங்கும் என்றும்
திருத்தந்தை இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 11, இவ்வியாழனன்று தான் விடுக்கும்
அப்போஸ்தலிக்க மடல் வழியே வெளியிட்டுள்ள தன் ‘Motu Proprio’ எண்ணங்கள், செப்டம்பர் மாதம்
முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் திருத்தந்தை இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.