எந்நேரமும் தூக்கம் தூக்கமாக வருகிறது, அடிக்கடி எதையாவது மறந்து விடுகிறேன், கொஞ்சம்தான்
சாப்பிடுகிறேன், உடம்பு பெருக்கிறது, அதிகச் சோர்வாக இருக்கிறது, சின்ன சின்ன விடயத்துக்குக்கூட
எரிச்சல் வந்து படப்படப்பாக இருக்கின்றது போன்ற அறிகுறிகள் இருந்தால் தைராய்டு பரிசோதனை
செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நோய் பெரும்பாலும்
பெண்களையே அதிகம் தாக்கும். தைராய்டு என்பது, நமது கழுத்துப் பகுதியில் வண்ணத்துப்பூச்சி
வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பியாகும். இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது,
குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். தைராய்டின் அளவு அதிகரித்தால்
மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவகாலப் பிரச்சனைகளை உருவாக்கும்.
தைராய்டு குறைவாக இருக்கும்போது வறண்ட தோல், உடல்எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண
நாட்களிலும் குளிர்வதைப்போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள்
உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும்போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில்
விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாகத் தைராய்டு
பிரச்சனை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக்கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையைச்
சரிசெய்ய முடியும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ சிகிச்சை அல்லது அறுவை
சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். உடற்பயிற்சி மூலமும் இப்பிரச்சனையை எதிர்கொள்ளலாம் தைராய்டு
பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக்கோஸ்,
முள்ளங்கி, குளிர்பானங்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் உணவில்
4 முதல் 5 கிராம் அளவு உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகளைச் சாப்பிடலாம்.
அவற்றை வேகவைக்கும் போது தண்ணீரை வடித்துவிட்டுப் பயன்படுத்தலாம். முழுத் தானியங்கள்
மற்றும் முளைகட்டிய பயறு வகைகளை உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது.
ஊட்டச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.