2013-07-06 16:36:07

வத்திக்கான் புத்தக வெளியீட்டாளர் : புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் ”விசுவாச ஒளி” ஓர் ஆன்மீக ஒளி


ஜூலை,06,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ”விசுவாச ஒளி” (“Lumen Fidei”) என்ற முதல் அப்போஸ்தலிக்கத் திருமடலின் தலைப்புப் பரிந்துரைப்பது போல அது ஓர் ஆன்மீக ஒளியாக உள்ளது என்று வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவன இயக்குனர் அருள்பணி ஜூசப்பே கோஸ்தா கூறினார்.
இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்கத் திருமடல் குறித்து CNA செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அருள்பணி கோஸ்தா, இத்திருமடல் ஆன்மீகப் புதுப்பித்தல் உணர்வை நன்றாக விளக்குகின்றது என்று கூறினார்.
இத்திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரின் பாணியையும் கொண்டுள்ளது என்று கூறிய அருள்பணி கோஸ்தா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருமடலாக இதனை வெளியிட்டிருப்பது, இவ்விரு திருத்தந்தையருக்கும் இடையே இருக்கும் ஆன்மீகச் சகோதரத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், ”விசுவாச ஒளி” திருமடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டனின் CAFOD பிறரன்பு அமைப்பு, நமது விசுவாசம் கடவுளிடமிருந்து வரும் விலைமதிப்பில்லாத கொடை மற்றும் மக்களின் வாழ்வை மாற்றவல்ல நன்மைக்கான வல்லமை மிக்க சக்தி என்று கூறியுள்ளது.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.