2013-07-05 15:55:28

ஜூலை 06, 2013. கற்றனைத்தூறும்...... மச்சு-பிச்சு மலை மர்மம்


தென்அமெரிக்க நாடான பெருவின் மச்சுபிச்சு மலை அதிசயங்கள் குறித்து 1911ம் ஆண்டு முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம்.
பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா பேரரசு, வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450ம் ஆண்டுகளில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா பேரரசின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் மூன்றுபுறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி, மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா பேரரசர் பச்சாகுட்டியின் மலை உறைவிடம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.
சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா பேரரசு, 1572ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் இஸ்பானிய படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது.
பெரிய வழவழப்பான சதுரக் கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட்டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து, பின்னர் பழைய நிலைக்கேத் திரும்பி விடுமாம்.
மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாயப் பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாயத் தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாயத் தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.
மச்சுபிச்சுவைப் பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981ல் பெரு அரசு அறிவித்தது. 1983ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலகப் பாரம்பரிய தலமாக அறிவித்தது.
மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளிச் சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்கழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றைப் பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை எனக் காரணம் கூறி யேல் பல்கலைக்கழகம் தட்டிக்கழித்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது.

ஆதாரம் சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.