2013-07-04 15:48:59

கற்றனைத்தூறும்.....பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்


எவரெஸ்ட் உட்பட உலகின் மிக உயரமான சிகரங்கள் அனைத்தையும் மனிதர் வென்றிருக்கின்றனர். மனிதரின் காலடி படாத பாலைவனங்கள் கிடையாது. உறைபனியால் மூடப்பட்ட தென் துருவத்தையும் வட துருவத்தையும் மனிதர் எட்டியிருக்கின்றனர். சந்திரனுக்கும் மனிதர் சென்று வந்திருக்கின்றனர். ஆனால் மனிதர் காலடி பதிக்க முடியாத இடம் ஒன்று இருக்கின்றதென்றால் அது கடலடித் தரையாகும். விண்வெளி வீரர் போல மிகப் பாதுகாப்பான உடை அணிந்து கடலில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் யாரேனும் போய் நிற்க முடியுமா என்றால் அது ஒரு போதும் சாத்தியமில்லை. ஏனெனில் கடலுக்கு அடியில் அந்த ஆழத்தில் அழுத்தம் மிக பயங்கரமான அளவில் இருக்கும். கடலுக்குள் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் நம் தலைக்கு மேலே உள்ள அத்தனை தண்ணீரும் சேர்ந்து நம்மை அழுத்தும். அத்துடன் நம்மைச் சுற்றிலும் உள்ள தண்ணீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும். அந்த அழுத்தமானது, கடல் மட்டத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்காக இருக்கும். 20 மீட்டர் ஆழத்துக்குச் சென்றால் அழுத்தம் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும். உலகின் கடல்களின் சராசரி ஆழம் நான்கு கிலோ மீட்டர். அந்த ஆழத்தில் அழுத்தம் 400 மடங்காக இருக்கும். கடலில் மிக ஆழத்தில் கடும் அழுத்தம் மட்டுமில்லை, ஏறக்குறைய 800 மீட்டர் ஆழத்துக்கு கீழே சென்றால் ஒரே காரிருள் சூழ்ந்திருக்கும். தவிர, கடல் நீரானது கடும் குளிர்ச்சியாக இருக்கும். 1960ம் ஆண்டில் இரண்டே இரண்டு பேர் கனத்த உருக்கினால் ஆன ஒரு கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் கலத்தில் போய் இறங்கினர். கனத்த பிளாஸ்டிக்கினால் ஆன ஜன்னல் வழியே கடலடித் தரையை சிறிது நேரம் கண்டனர். ட்ரீயஸ்ட் என்னும் பெயர் கொண்ட அந்த நீர் மூழ்கிக் கலத்தின் மூலம் இவ்வாறு சென்றவர்களில் ஒருவர் கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா, மற்றொருவர் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ். கடலின் ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ், ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்துகொண்டு 2005ம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது.

ஆதாரம் : அறிவியல்புரம்







All the contents on this site are copyrighted ©.