21ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அதற்கு முன்னர் எப்போதையும்விட தட்பவெப்ப நிலைகளில்
தீவிரப் பாதிப்புகள்
ஜூலை 04, 2013. 21ம் நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் அதற்கு முன்னர் எப்போதையும்விட
தட்பவெப்ப நிலைகளில் தீவிரப் பாதிப்புகள் இருந்ததாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. 2001க்கும்
2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலத்தின் வெப்பமும் கடலின் வெப்பமும் மிக அதிக அளவில்
இருந்ததாகக் கூறும் இந்த அறிக்கை, 1850ம் ஆண்டு முதல் உலகின் தட்பவெப்ப நிலை அதிகாரப்பூர்வமாகப்
பதிவுச் செய்யப்பட்டு வருவதிலிருந்து, தற்போதுதான் அதிக வெப்பம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும்
கூறுகிறது. ஆர்க்டிக் கடலில் பனி குறைந்துள்ளதும், உலகின் உயரமான சிகரங்களில் அதிக
அளவில் பனி உருகியுள்ளதும் இந்தப் பத்தாண்டுகளில், அதாவது 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட
காலத்தில் இடம்பெற்றவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஐ.நா.வின் அறிக்கை. பெருவெள்ளம்,
வறட்சி மற்றும் சூறாவளிகள் இந்தப் பத்தாண்டுகளில் அதிக அளவில் இடம்பெற்றதாகக் கூறும்
இவ்வறிக்கை, இவைகளால் மூன்று இலட்சத்து 70 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை,
அதற்கு முந்தைய 10 ஆண்டுகளைவிட 20 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கிறது.