திருத்தந்தை பிரான்சிஸ் : நமது பலவீனங்களுக்கு மத்தியிலும் நாம் துணிவுடன் இருக்க வேண்டும்
ஜூலை,02,2013. கிறிஸ்தவர்கள் தங்கள் பலவீனங்களுக்கு மத்தியிலும் துணிவுடன் இருப்பதற்கு
அழைக்கப்பட்டுள்ளனர் என்று புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய
திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். சோதனைகளை எதிர்கொள்ளும்போது
அவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு வெட்கப்படக் கூடாது, மாறாக, நாம் பலவீனமானவர்கள் என்பதை
ஏற்பதற்குத் துணிவு கொண்டு, தூய ஆவியின் அருளால் இறைவனால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை
அனுமதிக்க வேண்டும் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை. சோதனை வேளைகளிலும்,
கடினமான சூழல்களிலும், நான்கு மனப்பான்மைகளில் நாம் வாழ்வதை இந்நாளின் திருப்பலி வாசகங்களிலிருந்து
எடுத்து விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், லோத்துவின் காலந்தாழ்த்துதல் பற்றிக் குறிப்பிட்டு,
நாமும் நமது பாவநிலையிலிருந்து வெளியே வரத் தீர்மானிக்கிறோம், ஆனால் ஏதோ ஒன்று நம்மை
உள்ளே இழுக்கின்றது என்று கூறினார். புனித குழந்தை தெரேசா நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது
போல, சில நேரங்களில், சில சோதனைகளில் அவற்றிலிருந்து தப்பிப்பதே ஒரே தீர்வு, ஆதலால் அப்படிச்
செய்வதற்கு நாம் வெட்கப்படக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை. லோத்திடம் வானதூதர்
எச்சரித்தது போல, இப்படித் தப்பித்துச் செல்லும்போது திரும்பிப் பார்க்கக் கூடாது, கண்களை
முன்னோக்கியே வைக்க வேண்டும், லோத்தின் மனைவி செய்தது போல, ஆர்வக் கோளாறினால் நாம் திரும்பிப்
பார்க்கக் கூடாது, ஆர்வக் கோளாறு வாழ்வைப் பாழ்படுத்தும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்
எச்சரித்தார். மேலும், இயேசுவோடு படகில் சென்ற சீடர்கள் கடல் கொந்தளிப்பைக் கண்டு
பயந்தார்கள், ஆண்டவரே காப்பாற்றும், சாகப்போகிறோம் என்றார்கள் என்றுரைத்த திருத்தந்தை,
ஆண்டவரின் பாதையில் முன்னோக்கிச் செல்லப் பயப்படுவதும் சாத்தானின் சோதனை என்று விளக்கினார். இறுதியில்,
நான்காவது மனப்பான்மை தூய ஆவியின் அருளில் வாழ்வது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ்,
பாவத்தாலும் பயத்தாலும் ஆட்கொள்ளப்படும்போது ஆண்டவரிடம் திரும்பி அவரைத் தியானிக்க வேண்டும்,
பயப்பட வேண்டாம், எப்போதும் ஆண்டவரை நோக்குவோம் என்றுரைத்து மறையுரையை நிறைவு செய்தார்.