கர்தினால் கோக்கோபல்மேரியோ : வறுமையும் நிலையான வளர்ச்சியும் திருஅவைக்குச் சவால்
ஜூலை,02,2013. இன்னும் அதிகமான நீதியும் சமத்துவமும் நிறைந்த ஓர் உலகு மனித சமுதாயத்தின்
பெரும் பகுதியினரால் மறக்கப்பட்டு வருகின்றது என்று திருப்பீட சட்ட விளக்கங்கள் அவைத்
தலைவர் கர்தினால் பிரான்செஸ்கோ கோக்கோபல்மேரியோ கூறினார். வறுமை, பொதுச்சொத்துக்கள்
மற்றும் உறுதியான வளர்ச்சி என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய
கர்தினால் கோக்கோபல்மேரியோ இவ்வாறு கூறினார். இப்பூமியின் இயற்கை வளங்களை அறிவுப்பூர்வமாகப்
பயன்படுத்தவும், அவற்றைச் சிறந்த முறையில் சமமாகப் பங்கிடவும், வெப்பநிலை மாற்றத்தின்
பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கு தொலைநோக்குப் பார்வையில் தீர்மானங்கள் எடுக்கவும் அனைத்துலகச்
சமுதாயம் திறமையற்று இருக்கின்றது என்றும் கர்தினால் கோக்கோபல்மேரியோ குறை கூறினார். ஏழ்மை,
புதிய மில்லென்யத்தின் பெரும் சவாலாக இருக்கின்றது என்றும், ஏழ்மையை ஒழிப்பதற்கு அனைத்துலக
நிறுவனங்களும், நாடுகளும் பல அழகான எண்ணங்களையும், பல திட்டங்களையும், பல விதிமுறைகளையும்
முன்வைக்கின்றன, ஆனால் அவை வெறும் ஏக்கங்களாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்தார். அனைத்துலகச்
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.