2013-07-01 14:29:27

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் ஜூலை 5ல் வெளியிடப்படுகிறது


ஜூலை,01,2013. "Lumen fidei" அதாவது “விசுவாச ஒளி” என்ற பெயரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் அப்போஸ்தலிக்கத் திருமடல் ஜூலை 5, வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்படும் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் இத்திங்களன்று அறிவித்தது.
திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டையொட்டி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் முடிக்கப்பட்டுள்ளது. எனவே “நான்கு கைகள்” திருமடல் எனவும் இதனை ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 8, வருகிற திங்கட்கிழமையன்று இத்தாலியின் Lampedusa தீவுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அவ்விடத்திலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் அத்தீவில் வாழும் மக்களைச் சந்தித்து ஊக்கப்படுத்துவார் எனவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
அண்மையில் ஆப்ரிக்காவிலிருந்து குடியேற்றதாரர்களை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் பலர் கடலிலே உயிரிழந்தனர். இவர்களுக்காகவும் ampedusa தீவில் செபிக்கவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், தேவையில் இருக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு அழைப்புவிடுப்பார் என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.