திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கென எடுக்கப்படும் இராயப்பர் காசு
ஜூன்,28,2013. திருத்தந்தை அவர்களின் பிறரன்புப் பணிகளுக்கென உலகின் அனைத்துப் பங்கு
ஆலயங்களிலும் உண்டியல் எடுக்கப்படும் இராயப்பர் காசு உணர்த்தும் செய்தியை, எல்லைகளற்ற
ஒருமைப்பாடு, திருத்தந்தையின் திருப்பணி ஆகிய இருதலைப்புகளை வைத்து புரிந்துகொள்ள வேண்டுமென்று
பேரருள்திரு Tullio Poli கூறினார். புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவாகிய ஜூன் 29ம்
தேதியன்று அல்லது அந்நாளுக்கு அருகிலுள்ள ஞாயிறன்று உலகின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும்
எடுக்கப்படும் இராயப்பர் காசு குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, இந்த இராயப்பர்
காசு அமைப்பின் இயக்குனர் பேரருள்திரு Poli, இராயப்பர் காசு எடுக்கும் இந்நாள் திருத்தந்தை
அவர்களின் பிறரன்புக்கான நாள் என்று கூறினார். திருஅவை மற்றும் உலகில் வறுமையால் வாடுவோருக்கும்,
இன்னும் பல அவசரத் தேவைகளுக்கும் திருத்தந்தை உதவுவதற்கென இராயப்பர் காசு எடுக்கப்படுகிறது.