ஜூன்,28,2013. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வியன்னாவில் வரலாற்று சிறப்புமிக்க மனித உரிமைகள்
குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், இன்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பலர்
உலகெங்கும் வாழ்கின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அவையின் தலைவர் நவிபிள்ளை கூறினார். ஆஸ்ட்ரியாவின்
தலைநகர் வியன்னாவில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள வியன்னா+20 என்ற கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய
நவிபிள்ளை, கடந்த 20 ஆண்டுகளில் மனித உரிமைகள் குறித்த விவகாரங்களில் அதிக முன்னேற்றம்
இடம்பெற்றிருந்தாலும், இன்னும் உலகில் இடம்பெறும் பெருமளவான மனித உரிமை மீறல்கள் தடை
செய்யப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார். நீதியைப் பொருத்தவரை உலகெங்கும் அது பாரபட்சமின்றி
செயல்படுத்தப்பட வியன்னா அறிக்கையின் பின்புலத்தில் முயற்சிகள் எடுக்கப்படுமாறும் நவிபிள்ளை
வலியுறுத்தியுள்ளார்.