2013-06-26 16:13:26

இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி


ஜூன்,26,2013. ஜூன் 24, இத்திங்களன்று இறையடி சேர்ந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் அனுதாபத் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இத்தாலிய குடியரசில் முக்கியமான பங்கு வகித்துள்ள திருவாளர் Colombo அவர்கள், பக்தி மிகுந்த கத்தோலிக்கராக வாழ்ந்தார் என்றும், சமுதாயத்தின் பொதுநலனில் அதிக அக்கறை கொண்டவர் என்றும் திருத்தந்தையின் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும், செபங்களும், மறைந்த திருவாளர் Colombo அவர்களின் குடும்பத்திற்கு உறுதி செய்யப்படுவதாக இத்தந்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
1948ம் ஆண்டு முதல் இத்தாலியப் பாராளு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய திருவாளர் Colombo அவர்கள், 1970 முதல் 72 முடிய அந்நாட்டின் பிரதமாராகவும் பணியாற்றினார். இவர் தனது 93வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.