ஹிரோஷிமா அணுகுண்டு வெளியிட்ட வெப்பம்போல் நான்கு மடங்கு வெப்பம் புவியில் அதிகரிக்கும்
ஜூன்,25,2013. ஒவ்வொரு வினாடியும், இப்புவிமீது அதிகப்படியான வெப்பம் திணிக்கப்பட்டு
வருவதால் இப்பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெளியிட்ட
வெப்பத்தைப் போல நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்துப்
பேசிய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த அறிவியலாளர்
ஜான் குக், புவிமீது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகப்படியான கரியமில வாயுவின்
அடர்த்தி அதிகரித்து உள்ளதால், புவியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது என்றும், இவ்வெப்பம்,
ஜப்பானின், ஷிரோஷிமாவில், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் வெளியான
வெப்பத்தைவிட நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறினார். இந்தப் புவி வெப்பமயமாதலுக்கு
மனிதர்களே முக்கிய காரணம் என்றும், கடந்த, 20 ஆண்டுகளாக, இது குறித்து நடைபெற்று வரும்
ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால், புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை அறிவியலாளர்கள்
ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் ஜான் குக் கூறினார்.