ஜூன்,24,2013. மால்ட்டா நாட்டு பிரதமர் ஜோசப் மஸ்கட், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை
இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்புக்குப் பின்னர்
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான
உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் மால்ட்டா பிரதமர். கிறிஸ்தவத்தின்
பாதிப்பை தன் வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் அதிகம் கொண்டுள்ள மால்ட்டாவில், அண்மைக்காலங்களில்
திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான் பாலும், 16ம் பெனடிக்ட்டும் மேற்கொண்ட திருப்பயணங்கள்
ஏற்படுத்தியுள்ள ஆழமான தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாக திருப்பீடப்பத்திரிகை அலுவலகம்
வெளியிட்ட தகவல் கூறுகிறது. மால்ட்டாவில் கல்வி, நலவாழ்வு, பிறரன்புப் பணிகள் போன்றவற்றில்
தலத்திருஅவை ஆற்றிவரும் சேவைகள் பற்றியும், ஐரோப்பாவுக்குக் குடிபெயர விரும்புபவர்கள்,
மால்ட்டாவை தங்கள் பாதையாகப் பயன்படுத்தும்போது கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அரசின்
அணுகுமுறை மற்றும் அக்கறை பற்றியும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக அவ்வலுவலகம் தெரிவித்தது.