வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு கேரள ஆயர்கள் வேண்டுகோள்
ஜூன்,22,2013. இந்தியாவில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு
கத்தோலிக்கரைக் கேட்டுள்ளனர் கேரள ஆயர்கள். குன்றுகள் நிறைந்த உத்தர்கண்ட் மாநிலத்தில்
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் செபத்தாலும், பிற வளங்களாலும் உதவுமாறு
கேரளக் கத்தோலிக்கரைக் கேட்டுள்ளனர் ஆயர்கள். கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு இஞ்ஞாயிறன்று சிறப்பான செபங்களை ஒப்புக்கொடுக்குமாறும் கேரள ஆயர்கள் கத்தோலிக்கரைக்
கேட்டுள்ளனர். கங்கை நதிக் கரைகளில் அமைந்துள்ள புனித இடங்களைத் தரிசிக்கச் சென்ற
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அடித்துச் செல்லப்படும் பெரு வெள்ளத்தில் சிக்கித் தவித்துக்
கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய 35 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 55 ஆயிரம்
பேர் இன்னும் மீட்புக்காகக் காத்திருக்கின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.