ஜூன்,20,2013. புதியத் தொடர்பு சாதனங்களின் வலிமையை உணர்ந்துள்ள இலங்கைத் திருஅவை, இணையத்தள
வானொலி ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது என்று இலங்கை கத்தோலிக்க சமூகத்தொடர்பு மையத்தின்
இயக்குனர் அருள்தந்தை பெனடிக்ட் ஜோசப் கூறினார். இறைவார்த்தையை எடுத்துரைக்கவும்,
இலங்கையின் சமுதாயப் பிரச்சனைகளைக் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் விளக்கவும் இந்த இணையத்தள
வானொலி உதவும் என்று அருள்தந்தை ஜோசப் எடுத்துரைத்தார். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில்
20 விழுக்காடு கத்தோலிக்கர்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அருள்தந்தை ஜோசப், இந்த இணையத்தள
வானொலியில் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் என்றும், சில நிகழ்ச்சிகள்
சிங்கள மொழியிலும், தமிழிலும் ஒலிபரப்பாகும் என்றும் கூறினார். இலங்கையில் பல வானொலி
நிலையங்கள் இருந்தாலும், கத்தோலிக்க வானொலி நிலையத்திற்குத் தனியொரு இடத்தை நாங்கள் உருவாக்க
முடியும் என்ற நம்பிக்கையை ஆசிய செய்தியிடம் வெளியிட்டார் அருள்தந்தை பெனடிக்ட் ஜோசப்.