மாசடைந்த காற்றை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு, மன வளர்ச்சிக் குறைபாடு அபாயம்
ஜூன் 18,2013. அதிகளவில் மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின்
குழந்தைகள் ஆட்டிஸம் எனும் மன வளர்ச்சிக் குறைபாடு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் பெருமளவில்
உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இப்பெண்களின் குழந்தைகளுக்கு,
வாயு மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளை விட ஆட்டிஸம்
ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1989ம்
ஆண்டிலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஹார்வர்ட்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களின் வருமானம்,
கல்வி மற்றும் புகைத்தல் பழக்கங்கள் உள்ளிட்ட நிலைமைகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. ஆட்டிஸம்
என்ற இந்தப் பாதிப்பு, அமெரிக்காவில் 88 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளிவிபரங்கள்
கூறுகின்றன.