2013-06-15 16:30:23

வெஸ்ட்மின்ஸ்டரில் கர்தினால் Tauran : அமைதிக்காகப் பல்சமயப் பிரார்த்தனை


ஜூன்,15,2013. உலகை இன்னும் அமைதியான இடமாக அமைப்பதற்குச் செபமும் ஒன்றிப்பும் இரு தூண்களாக உள்ளன என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
பிரிட்டனுக்கு ஆறு நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Tauran இவ்வெள்ளிக்கிழமையன்று இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய அறையில் உலகின் பெரிய மதங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து உலக அமைதிக்காகச் செபித்தார்.
அனைவரும் ஏங்குகின்ற இன்னும் அதிகமான நீதியும் அமைதியும் நிறைந்த உலகம் உருவாக்கப்படுமாறு அனைவரும் செபிப்போம் என்றுரைத்த கர்தினால் Tauran, அமைதிக்காகச் செபிக்கும்போது அமைதிக்குச் சாட்சிகளாக வாழ்வதற்கு இறைவன் நம்மை மாற்றுகிறார் என்றும் கூறினார்.
1986ம் ஆண்டு இத்தாலியின் அசிசியில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நடத்திய உலக அமைதிக்கானச் செபத்தால் உந்தப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டரில் இச்செபம் நடத்தப்பட்டது.
இச்சுற்றுப்பயணத்தில் பிரிட்டனில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மதப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார் கர்தினால் Tauran.
கடந்த புதனன்று தொடங்கிய இச்சுற்றுப்பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவுடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.