2013-06-13 17:12:56

ஜலந்தர் மற்றும் Eluru மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்


ஜூன்,13,2013. டில்லி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் Franco Mulakkal அவர்களை ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்தார்.
ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Anil Joseph Thomas Couto அவர்களை டில்லி பேராயராக முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தியபின், ஜலந்தர் மறைமாவட்டம் கடந்த ஐந்து மாதங்கள் ஆயரின்றி இருந்தது.
ஜலந்தர் ஆயராகப் பொறுப்பேற்கும் ஆயர் Franco Mulakkal, கேரளாவின் மட்டம் என்ற ஊரில் 1964ம் ஆண்டு பிறந்தவர். 1990ம் ஆண்டு ஜலந்தர் மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Mulakkal அவர்கள், 2009ம் ஆண்டு டில்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஆந்திர மாநிலத்தின் Eluru மறைமாவட்டத்தின் ஆயராக அருள் பணியாளர் Jaya Rao Polimera அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.
1965ம் ஆண்டு ஆந்திராவின் வாரங்கல் மறைமாவட்டத்தின் தர்மசாகர் எனுமிடத்தில் பிறந்த Jaya Rao அவர்கள், 1992ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
வாரங்கல் மறைமாவட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட இவர், 2009ம் ஆண்டிலிருந்து மறைமாவட்டத்தின் இளையோர் பணி மையத்தின் இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.
Eluru மறைமாவட்டத்தின் ஆயராக 1977ம் ஆண்டு பொறுப்பேற்ற John Mulagada அவர்கள் 2009ம் ஆண்டு இறையடி சேர்ந்ததையடுத்து, கடந்த நான்கு ஆண்டளவாய் இம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்துவந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.