சுற்றுச்சூழல் பிரச்சனைகளின்போது, அரசுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள
சாதாரண மக்களுக்கு சக்தியில்லை - இந்தோனேசிய ஆயர் Agustinus Agus
ஜூன்,13,2013. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழும்போது, அரசுடனும், வர்த்தக சக்திகளுடனும்
நேரடி தொடர்பு கொள்வதற்கோ, பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்கோ சாதாரண மக்களுக்கு சக்தியில்லை
என்று இந்தோனேசிய நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார். இந்தோனேசியாவில் உள்ள காடுகளை அழித்து
அங்கு பல சுரங்கத் தொழில்களை ஆரம்பித்துள்ள வர்த்தகச் சக்திகளின் ஆதிக்கத்தைத் தடுக்க
எளிய மக்களுக்கு வழி முறைகளும், சக்தியும் இல்லை என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் நீதி,
அமைதி பணிக்குழுவின் தலைவரான ஆயர் Agustinus Agus அவர்கள், அருள் பணியாளர்கள், இருபால்
துறவியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து ஜகார்தாவில் இப்புதனன்று மேற்கொண்ட
ஒரு கருத்தரங்கின்போது குறிப்பிட்டார். 2004ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய பல்வேறு
சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு அளித்துள்ள உத்தரவால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை
உருவாக்கியுள்ள 1,724 எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்தோனேசியாவில்
இயங்கிவரும் 10,677 சுரங்கத் தொழில் நிறுவனங்களால், சுற்றுச்சூழலுக்கும், சமுதாயத்தின்
விளிம்புகளில் வாழும் மக்களுக்கும் பெரும் அழிவுகள் உருவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.