ஜூன் 12, இப்புதனன்று அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ILO எனப்படும் அனைத்துலகத் தொழில் நிறுவனம் (International Labour Organisation) 2002ம்
ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் தேதி இந்த உலக நாளைச் சிறப்பித்து வருகிறது. தொழிலாளர்கள்
வாழ்வில் நீதியைக் கொணர்வதற்கென 1919ம் ஆண்டு உருவான ILOவின் பல அமர்வுகளில் அடிக்கடி
எழுந்த கேள்வி - எந்த வயதினர் தொழிலில் ஈடுபடலாம்? குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில்,
1919, 20, 21, 32, 36, 37, 59, 65 ஆகிய எட்டு ஆண்டுகள் நடைபெற்ற ILO அமர்வுகளில் தொழில்
செய்வோரின் குறைந்த அளவு வயது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்களின்
உச்சக்கட்டமாக, 1973ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தில்:
பள்ளிக்குச்
செல்லும் வயதில் இருப்பவர்கள், அதாவது, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழில் செய்வதற்கு
தடை விதிக்கப்பட்டது. உடல் நலத்தைக் கெடுக்கும் பாதுகாப்பற்றச் சூழல்களிலும், நன்னெறியைக்
கெடுக்கும் சூழல்களிலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தொழில் செய்யக்கூடாது.
என்பவை
ILO வெளியிட்ட உறுதிமொழிகள். 1999ம் ஆண்டு நடைபெற்ற ILOவின் 182வது அமர்வில் 'மிக
மோசமான குழந்தைத்தொழில் வடிவங்கள்' (Worst forms of Child Labour) எவை என்பது தெளிவாக்கப்பட்டது.
குழந்தைகள், வர்த்தகப் பொருட்களாக வாங்க, விற்கப்படுதல். பாலியல் தொழிலில்
குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுதல். போதைப்பொருள் வர்த்தகத்தில் குழந்தைகளை ஈடுபடுத்துதல். உடலுக்கும்,
மனதுக்கும் ஆபத்து விளைக்கும் சூழல்களில் குழந்தைகள் வேலை செய்தல்.
94
ஆண்டுகளாய் இயங்கி வரும் ILO (1919-2013), இதுவரை பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தாலும்,
அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாம் இன்னும் வெகுவாகப் பின்தங்கியுள்ளோம். ஆபத்தானச்
சூழல்களில் நடைபெறும் குழந்தைத்தொழில் என்ற அவலத்தையாகிலும் 2016ம் ஆண்டுக்குள் உலகிலிருந்து
முற்றிலும் நீக்கவேண்டும் என்று ஐ.நா. பொது அவை கண்டுள்ள கனவு நிறைவேறுமா? முயன்றால்,
முடியாதது எதுவுமில்லை. எடுத்துகாட்டாக, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் அனைத்துலக குழந்தைத்தொழில்
எதிர்ப்பு நாளுக்கென தரப்பட்டுள்ள மையக் கருத்து: No to Child Labour in Domestic
Work.இல்லங்களில் குழந்தைத்தொழில் வேண்டாம். இங்கிருந்து நமது முயற்சிகளைத்
துவக்கலாமே!
ஆதாரம் - http://en.wikipedia.org; http://www.ilo.org