இணைய, தொலைபேசி சேவைகள் கண்காணிக்கப்படுவது குறித்து கவலை
ஜூன்,08,2013. தொலைபேசி மற்றும் இணையத்தைக் கண்காணிக்கும், மத்திய கண்காணிப்பு அமைப்பு
முறையை இந்தியா உருவாக்கி செயல்படுத்தி வருவது, தனி நபர்களின் அந்தரங்கத்தையும், கருத்துச்
சுதந்திரத்தையும் பாதிப்பதாக Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. மும்பை
தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு 2009ம் ஆண்டிலிருந்து இணையதளம், தொலைபேசி மற்றும்
குறுந்தகவல்களைக் கண்காணிக்கும் கட்டமைப்புக்களை இந்தியா மெல்ல மெல்ல ஏற்படுத்தி வருவதன்
தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் இந்திய அரசு சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் என்ற கட்டமைப்பைத்
தோற்றுவித்து, இணைய தகவல் பரிமாற்றம் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க இந்த
அமைப்புக்குச் சட்டரீதியான அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதனால் கடுமையான பின்விளைவுகள்
ஏற்படும் என்கிறார் Human Rights Watch அமைப்பின் ஜெய்ஸ்ரீ பஜோரியா. இடைமறித்து எடுக்கப்படும்
தகவல்கள் எப்படி உபயோகிக்கப்படும், யாரால் பயன்படுத்தப்படும், எங்கே அவை பாதுகாத்து வைக்கப்படும்
என்பது போன்ற எவ்விதமான தகவல்களையும் இந்தியா வெளியிடவில்லை என்பது கவலை தருவதாக உள்ளது
என்றார் ஜெய்ஸ்ரீ பஜோரியா.