2013-06-05 16:57:08

போலந்து நாட்டுக் கர்தினால் Stanislaw Nagy அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய அனுதாபத் தந்தி


ஜூன்,05,2013. ஜூன் 5, இப்புதனன்று இறையடி சேர்ந்த போலந்து நாட்டுக் கர்தினால் Stanislaw Nagy அவர்களின் மறைவுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்று அனுப்பியுள்ளார்.
கர்தினால் Nagy கல்வி வழியாக திருஅவைக்கு ஆற்றியத் தொண்டையும், சிறப்பாக, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் காலத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு கர்தினால் Nagy ஆற்றிய சேவைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அனுதாபச் செய்தியில் நினைவுகூர்ந்தார்.
கர்தினால் Nagy அவர்களை இழந்த Krakow மறைமாவட்டத்திற்கும், அவர் சார்ந்திருந்த இயேசுவின் திரு இருதய சபையினருக்கும் அனுதாபங்களைத் தெரிவித்து, Krakow பேராயர் கர்தினால் Stanislaw Dziwisz அவர்களுக்கு இத்தந்தி அனுப்பப்பட்டது.
1921ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி போலந்து நாட்டில் பிறந்த கர்தினால் Nagy, தன் 16வது வயதில் துறவு வாழ்வை மேற்கொண்டு, 23வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Lublin என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய Nagy அவர்கள், கத்தோலிக்க, லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 2003ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், ஜூன் 5, இப்புதனன்று, தன் 91ம் வயதில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.