துருக்கி ஆயர் : அரசியலில் விட்டுக்கொடுத்து வாழும் பண்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட
வேண்டும்
ஜூன்,04,2013. சமுதாயத்தின் பல்வேறு நிலையில் இருப்பவர்களோடு நல்லிணக்கமாக வாழ்வதற்கு,
விட்டுக்கொடுத்து வாழும் பண்பு அரசியலில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று துருக்கி நாட்டின்
இஸ்தான்புல் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Louis Pelatre கூறினார். துருக்கியில்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ளவேளை, அந்நாட்டின் நிலவரம்
குறித்து Fides செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் Pelatre இவ்வாறு கூறினார். துருக்கியிலுள்ள
கிறிஸ்தவ சமூகங்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் எந்தவிதத்திலும் நேரிடையாகக் கலந்து கொள்ளவில்லை
என்றுரைத்த ஆயர், அந்நாட்டின் இசுலாமியத் தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் மாணவர்கள், அரசுக்கு
எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்.