ஜூன்,01,2013. கடவுளின் அன்பை ஒவ்வொருவருக்கும் வழங்கும் உண்மையான குடும்பமாகத் திருஅவை
எப்போதும் விளங்க வேண்டும் என்று இந்த நம்பிக்கை ஆண்டில் ஆண்டவரிடம் செபிப்போம் என்று
தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். @Pontifex
என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில்
வெளியிடப்பட்டுள்ளது. தண்ணீரும் நலவாழ்வு வசதிகளும் கிடைப்பதற்கு அனைத்துலக அளவில்
ஒத்துழைப்பு அவசியம் என்று திருப்பீடச் செயலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று
எழுதியுள்ளது TerzaLoggia @TerzaLoggia என்ற டுவிட்டர் பக்கத்தில், இத்தாலியம் மற்றும்
ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது திருப்பீடச் செயலகம். மேலும், இஞ்ஞாயிறு
உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருநற்கருணை
ஆராதனை திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். நம்பிக்கை ஆண்டின்
ஒரு பகுதியாக வத்திக்கானில் திருநற்கருணை ஆராதனை இடம்பெறும் அதே நேரத்தில், உலகின் அனைத்து
மறைமாவட்டங்களும் இதே திருவழிபாட்டை நடத்தி ஆன்மீகரீதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன்
ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவரின் கருத்துக்களுக்காகச் செபிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கையில் இஞ்ஞாயிறு இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை திருநற்கருணை
ஆராதனை நடைபெறும்.