பேராயர் தொமாசி : மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதியான
பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்
மே,31,2013. பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற டாக்கா கட்டிடத் தொழிற்சாலை விபத்தின்
கோரக்காட்சிகள் இன்னும் உலகினரின் கண்ணைவிட்டு அகலாதிருக்கும்வேளை, இன்றும் உலகில் பணித்தளங்களில்
பாதுகாப்பற்ற சூழல்கள் காணப்படுகின்றன என்று திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டத்தில்
கூறினார். “பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மனித உரிமைகளும்” என்ற தலைப்பில் இடம்பெற்ற
ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின்
நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார். கழகங்கள் நடத்த
உரிமை, அனைத்துவிதமான கட்டாயத் தொழில்முறையை அகற்றுதல், சிறார் தொழில்முறையை ஒழித்தல்,
வேலைவாய்ப்பிலும் ஊதியம் வழங்குவதிலும் பாகுபாட்டைக் களைதல் ஆகியவை அனைத்து நாடுகளிலும்
செயல்படுத்தப்படுமாறும் பேராயர் தொமாசி கேட்டுக்கொண்டுள்ளார். சமூகத்தில் பன்னாட்டுத்
தொழில் நிறுவனங்களின் கடமையையும் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட
மனித உரிமைகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் அந்தந்த இடங்களில் மதித்து நடக்குமாறும்
வலியுறுத்தியுள்ளார்.