2013-05-30 16:18:09

புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை ஆற்றும் மறையுரைகள், அவர் மனம் விட்டு பேசும் வார்த்தைகள் - அருள்தந்தை Federico Lombardi


மே,30,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், ஒவ்வொரு நாள் காலையிலும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றி மறையுரையும் வழங்கி வருகிறார்.
இத்திருப்பலிகளில் அவர் ஆற்றும் மறையுரைகள் நல்ல எண்ணங்களை ஏந்தி வருவதால், அவற்றை முழுமையாக மக்களுக்கு வழங்காமல், ஒரு சில பகுதிகளை வத்திக்கான் வானொலியும், L’Osservatore Romano நாளிதழும் வழங்கி வருவது குறித்து ஊடகங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.
இக்கேள்விகளுக்கு இப்புதனன்று பதில் அளித்த திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலிகளில் ஆற்றும் மறையுரைகள், ஒரு குறிப்பிட்ட குழுவுடன் அவர் மனம் விட்டு பேசும் வார்த்தைகளாக இருப்பதால், அவற்றை நேரடி ஒளிபரப்பு மற்றும் ஒலிபரப்பு செய்வதை, திருத்தந்தை விரும்பவில்லை என்று விளக்கினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மறையுரைகளில் ஆழமான பல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதால், மறையுரைகளின் முக்கிய எண்ணங்கள் அனைவரையும் அடையும்படி, வானொலியிலும், நாளிதழிலும் ஒரு சில எண்ணங்கள் வெளியிடப்படுகின்றன என்று அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.

ஆதாரம் – வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.