தென் கொரியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 85,000 கூடுதலாக உயர்ந்துள்ளது
மே,30,2013. கடந்த 2012ம் ஆண்டு தென் கொரியாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ
85,000 கூடுதலாக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது. 2011ம்
ஆண்டு இருந்த எண்ணிக்கையைவிட, கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 84,959 பேர் அதிகமாகி
உள்ளது என்று ஆயர்கள் பேரவை அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது. இவ்வறிக்கையின்படி,
2012ம் ஆண்டு முடியும் வேளையில், தென் கொரியாவில் 53 இலட்சத்து, 61,369 கத்தோலிக்கர்கள்
உள்ளனர் என்றும், இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10.3 விழுக்காடு என்றும் தெரிய
வந்துள்ளது. தென் கொரியாவில் பணிபுரியும் அருள் பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு
வளர்ந்துள்ளது என்றும், 1,149 கத்தோலிக்க மக்களுக்கு ஒருவர் அருள் பணியாளராக உள்ளார்
என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.