சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த நேரடியான தகவல்களைக் கண்டறியச்
செல்லும் மெக்சிகோ ஆயர் Lopez
மே,30,2013. சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த நேரடியான தகவல்களைக் கண்டறிய
ஜூன் மாதத் துவக்கத்தில் அந்நாட்டிற்குச் செல்லவிருக்கும் 12 பேர் அடங்கிய குழுவில் மெக்சிகோ
நாட்டின் Saltillo மறைமாவட்ட ஆயர் Raul Vera Lopez அவர்களும் ஒருவர். ஓராண்டளவாக சிரியாவில்
நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரினால், பல்லாயிரம் பேர் மிகக் கடுமையான துயரங்களுக்கு
உள்ளாகி வருகின்றனர். இந்தக் கொடுமைகளின் முழு விவரங்களும் வெளியிடப்படாததால், இப்பிரதிநிதிகள்
அடங்கிய குழுவினர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. மறையுரையாற்றுவோரின்
சபை எனப்படும் புனித தோமினிக் சபையைச் சேர்ந்த ஆயர் Lopez அவர்கள், மனித உரிமைகளுக்காக
குரல் கொடுத்து வருபவர், எனவே, 2012ம் ஆண்டு, நொபெல் அமைதிப் பரிசுக்கு ஆயர் Lopez அவர்களின்
பெயர் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.