"நம்பிக்கை ஆண்டில் அருள் பணியாளரின் மனமாற்றம்" - கர்தினால் Piacenzaவின்
உரை
மே,29,2013. "நம்பிக்கை ஆண்டில் அருள் பணியாளரின் மனமாற்றம்" என்ற தலைப்பில் வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று இஸ்பானிய நாட்டின் மத்ரித் நகரில் உரையொன்றை நிகழ்த்தினார். இஸ்பானிய
ஆயர்கள் பேரவையின் அழைப்பின்பேரில் மத்ரித் சென்றுள்ள அருள் பணியாளர்கள் திருப்பீடப்
பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza, மனம் திருந்தி மன உறுதிபெற்ற அருள் பணியாளர்,
மக்கள் பணியில் தன்னையே அர்ப்பணிக்க முடியும் என்ற கருத்தில் உரை வழங்கினார். அருள்
பணியாளர் ஒவ்வொருவரும் தூய ஆவியாரை தங்கள் தனிப்பட்ட வாழ்வுக்கெனப் பெறுவதில்லை மாறாக,
மக்கள் பணிக்கே பெறுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை கர்தினால்
Piacenza தன் உரையில் மேற்கோளாகக் காட்டிப் பேசினார். நற்செய்தியை இன்னும் ஆழமாகப்
புரிந்துகொள்ளவும், அருள் பணிகளுக்கு திருஅவை வழங்கும் அனைத்து கருவிகளையும் முழுமையாகப்
பயன்படுத்தவும் ஒவ்வொரு அருள் பணியாளரும் மன மாற்றம் பெறவேண்டும் என்றும், இத்தகைய மன
மாற்றம் நம்பிக்கை ஆண்டில் அருள் பணியாளர்கள் பெறும் சிறந்ததொரு கொடை என்றும் கர்தினால்
Piacenza தன் உரையில் சுட்டிக்காட்டினார். மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தூண்டியெழுப்புவதற்கு
முன்னதாக, அருள் பணியாளர்கள் தங்கள் நம்பிக்கையைத் தூண்டி எழுப்புதல் அவசியமாகிறது என்றும்
கர்தினால் Piacenza தன் உரையில் வலியுறுத்தினார்.