2013-05-28 16:12:20

திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோரே, உயர்வான இலக்கு நோக்கிச் செல்லப் பயப்படாதீர்கள்


மே,28,2013. அன்பு இளையோரே, அன்னையாம் திருஅவை உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இதுதான் : உங்கள் இதயங்கள் விரியட்டும், எண்ணங்கள் உயரட்டும், அச்சங்கள் அகலட்டும்
இச்செவ்வாய்க்கிழமையன்று @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ஒன்பது மொழிகளில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாவான இவ்வியாழனன்று உள்ளூர் நேரம் மாலை 7 மணிக்கு உரோம் தூய ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலிக்குப் பின்னர் அங்கிருந்து தூய மேரி மேஜர் பசிலிக்காவரை திருநற்கருணை பவனி ஒன்றையும் தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை.
இந்நிகழ்வு குறித்து உரோம் மறைமாவட்ட இறைமக்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள உரோம் மறைமாவட்டத்துக்கானத் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Agostino Vallini, இத்திருப்பவனி, இந்நம்பிக்கை ஆண்டில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது, இதன்மூலம் திருநற்கருணையில் இயேசு கிறிஸ்து உண்மையிலேயே இருக்கிறார் என்பதை உரோம் மக்களுக்கு நாம் அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் இத்திருப்பலியில் கலந்து கொள்வதற்கு அனுமதிச்சீட்டு அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.