ஊட்டச்சத்துப் பற்றாக்குறை சிறாரின் கல்வித்திறனைப் பாதிக்கக்கூடும், ஒரு குழந்தைநல அமைப்பு
எச்சரிக்கை
மே,28,2013. உலகின் சிறாரில் 25 விழுக்காட்டினருக்கு ஆண்டுக்கணக்கில் போதிய ஊட்டச்சத்து
கிடைக்காத காரணத்தால், அவர்கள் பள்ளியில் நன்றாக படிக்க முடியாமல் போகும் ஆபத்து உள்ளது
என, Save the Children என்ற பிரிட்டனின் பிறரன்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகின்
சிறாரில் 25 விழுக்காட்டினர் நீண்டகாலமாக சத்துணவுப் பற்றாக்குறையால் துன்புற்றுவரும்வேளை,
இந்நிலை இலட்சக்கணக்கான இளையோரின் வாழ்வை ஆபத்தில் வைத்துள்ளது என்று Save the Children
நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை கூறுகிறது. சிறாரின் எழுதவும் படிக்கவுமான
கல்வித்திறன் சத்துணவுப் பற்றாக்குறைவால் மோசமாகப் பாதிக்கப்படலாம் எனவும் இவ்வாய்வறிக்கை
எச்சரிக்கின்றது. அடுத்த மாதம் நடக்கவுள்ள தொழிற்வளர்ச்சியடைந்த ஜி8 நாடுகளின் உச்சி
மாநாட்டில், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை ஒழிப்பது குறித்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை
கொடுக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டனின் அந்தப் பிறரன்பு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்தியா,
எத்தியோப்பியா, பெரு, வியட்நாம் போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கானச் சிறாரிடையே ஆய்வு நடத்தி
இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது Save the Children நிறுவனம்.